இந்தியா

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?

Published

on

காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் கட்டு கட்டாக பணம்! நடந்தது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

மறுபுறம், இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள், மணிப்பூர், அதானி, உ.பி. சம்பல் மசூதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவைகளில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிவருகின்றனர். ஆனால், மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள், அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினமும் அவை கூடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி மீது மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியபோது, அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறியதாவது; “நேற்று அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு அதிகாரிகளால் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Advertisement

இதற்கு அவையில் உடனடியாக பதில் தந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. எனவே அது உறுதி செய்யும் வரை அவரது பெயரைக் குறிப்பிடக்கூடாது” என்று தெரிவித்தார். இதற்கு பதில் தந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இருக்கை எண் மற்றும் எம்.பி.யின் பெயரை சொல்வதில் தவறில்லை. நாடாளுமன்றத்திற்குள் கட்டு கட்டாக பணம் கொண்டுவருவது ஏற்புடையதா? இந்த விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், இதற்கு அபிஷேக் மனு சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், “நேற்று பிற்பகல் 12.57 மணிக்கு நான் நாடாளுமன்றத்திற்குள் வந்தேன். நான் வந்த மூன்று நிமிடத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்ற உணவகத்திற்கு ஒரு மணிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நேற்று என் கையில் வெறும் ஒரே ஒரு ரூ.500 தாளை மட்டுமே எடுத்துவந்தேன். எனவே எனது இருக்கையில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “இந்தச் செயல் நாடாளுமன்றத்தின் மதிப்பை பாழாக்கும் செயல். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்திற்குள் எம்.பி. ஒருவரின் இருக்கையில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version