இந்தியா
முட்டையிட வரும் ஆமைகள்… உயிரிழந்து கரை ஒதுங்க காரணம் என்ன..?
முட்டையிட வரும் ஆமைகள்… உயிரிழந்து கரை ஒதுங்க காரணம் என்ன..?
முட்டையிட வரும் ஆமைகள்- உயிரழந்து கரை ஒதுங்குவது ஏன்
மண்டபம் முனைக்காடு கடற்கரையில் தலையில் காயத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்த அரியவகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமை. கடலில் வீசும் காற்றினால் நிலை தடுமாறி படகுகள், பாறைகளில் மோதி இறக்கும் ஆமைகள் இனங்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் ஆலிவ் ரெட்லி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, ஓங்கில் ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. அரியவகை ஆமை இனங்கள் என்பதால் அழிந்து விடாமல் பாதுகாக்க ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் சார்பில் தனுஷ்கோடியில் ஆமை குஞ்சு பொரிப்பகம் அமைத்து கரையோரத்தில் இட்டுச் செல்லும் முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பொரித்தவுடன் கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் ஆமைகள் முட்டையிடும் காலங்களாகும். தற்போது, டிசம்பர் மாதம் என்பதால் முட்டையிடுவதற்காக கரைக்கு வரத்தொடங்கி உள்ளன. ஆமைகள் முட்டையிடும் மண்டபம் முகாம் முனைக்காடு வடக்கு கடல் பகுதியில் 10 கிலோக்கு மேல் எடை உடைய அரியவகை ஆமையான பங்குனி ஆமை என்ற ஆலிவ் ரெட்லி ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கிக் கிடந்தது. இதனை மீனவர்கள் பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தற்போது வங்கக்கடலில் வடகிழக்கு திசையில் காற்று வீசுவதால் காற்றின் திசையில் ஆமைகள் அடித்துச் செல்லப்பட்டு பாறைகள் அல்லது படகுகளில் மோதி காயம் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்குவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. வலையில் சிக்கும் ஆமைகளை கடலில் பத்திரமாக விட்டுவிடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.