இந்தியா
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி… ரூ. 15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கிய நடிகர் கார்த்தி…
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி… ரூ. 15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கிய நடிகர் கார்த்தி…
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியிடம் நடிகர் கார்த்தி இன்று வழங்கினார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த மாவட்டங்களில் தமிழக அரசு சார்பாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டதாகக் கூறி மத்திய அரசு சார்பில் 2000 கோடி நிவாரண தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், பாதிப்புகள் குறித்து தகவல்களை சேகரிக்க மத்திய அரசின் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக ஸ்டாலினிடம் மோடி கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணப் பணிக்காக தமிழ்நாட்டிற்கு ரூ. 994.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 994.80 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், மத்திய குழுவின் ஆய்வுக்குப் பிறகு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் – @UzhavanFDN அமைப்பின் நிறுவனருமான சகோதரர் @Karthi_Offl அவர்கள் ரூபாய்… pic.twitter.com/yv97h1bul1
இதற்கிடையே ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக பல்வேறு திரை நட்சத்திரங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இந்நிலையில் இன்று நடிகர் கார்த்தி ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை உதயநிதியிடம் இன்று அளித்துள்ளார்.