இந்தியா

Aadhav Arjuna: “கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்” – ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை.. விசிக அடுக்கிய காரணங்கள்!

Published

on

Aadhav Arjuna: “கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்” – ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை.. விசிக அடுக்கிய காரணங்கள்!

Advertisement

சமீபத்தில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவின் மன்னராட்சி விமர்சனம், எதிர்க்கட்சிகளை தாண்டி, திமுக கூட்டணிக்குள்ளும் புகைச்சலை ஏற்படுத்தியது.

 

இதற்கு சான்று தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதில். மன்னராட்சி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, “யார் பிறப்பால் முதல்வர் ஆனது. மக்கள் தேர்தெடுத்து தான் முதல்வர் ஆனார். இந்த அறிவு கூட இல்லையா அவருக்கு?” என்று காட்டமாக ஒருமையில் பேசினார்.

Advertisement

இதுவரை எதிர்க்கட்சிகளே திமுக மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில், தற்போது திமுக கூட்டணி கட்சிக்குள்ளேயே இப்படியான விமர்சனத்தை முன்வைத்து ஆதவ் அர்ஜுனா பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இப்போது மட்டுமல்ல, சமீப காலங்களாக உதயநிதியை குறிவைத்து ஆதவ் அர்ஜுனா பேசிவந்தது சர்ச்சைகளுக்கு வித்திட்டது. உதயநிதி துணை முதல்வராக பதவியேற்கும்போது ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வைக்க தவறவில்லை. இப்படியாக தொடர்ச்சியாக உதயநிதியை குறிவைத்து சீண்ட, ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.

விசிக தரப்பில் இருந்து உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு பின் ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. அதன்படி, மதியம் 1 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வைத்து இருவரும் சந்திக்க உள்ளனர். இதற்காக திருமாவளவன் தலைமைச் செயலகம் சென்றுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் சஸ்பெண்ட் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து நேற்றுமுன்தினம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனா எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

Advertisement

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version