இந்தியா
நிதி திரட்டி ரகசிய செயல்பாடு.. விடுதலைப் புலிகள் மீது தடையை நீட்டித்த தீர்ப்பாயம்
நிதி திரட்டி ரகசிய செயல்பாடு.. விடுதலைப் புலிகள் மீது தடையை நீட்டித்த தீர்ப்பாயம்
இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும் என போராடிய அமைப்பு விடுதலைப் புலிகள். கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்பத்தூரில் கொலை செய்யப்பட்டதில் இருந்து அந்த அமைப்பை இந்தியாவில் பயங்கரவாதி அமைப்பாக அறிவித்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகும் விடுதலைப் புலிகள் மீதான் தடை இந்தியாவில் தொடர்ந்துவருகிறது.
அதன்படி கடந்த மே மாதம் 14ம் தேதி மீண்டும் விடுதலைப் புலிகள் மீதான் தடையை ஐந்து வருடத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பதை முடிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்தத் தீர்ப்பாயம் விசாரித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டது. இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ, பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம், ஈழம் அமைவதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபடுவதையோ அந்த இயக்கம் கைவிடவில்லை.
இந்தியாவின் இறையாண்மைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது” என்றும், “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த இயக்கம் தொடர்ந்து ஈடுபடுவதாகவும்” தீர்ப்பாயம் தெரிவித்தது.
எனவே யுஏபிஏ சட்டத்தின் கீழ் அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக தெரிவித்த தீர்ப்பாயம், அந்த இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.