இந்தியா
பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. போலீஸ் விசாரணை
பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. போலீஸ் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, பெல்லியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த தோல் மருத்துவர் வசந்தகுமார். இவரின் 14 வயது மகள், காவேரிப்பாக்கம் அருகே உள்ள சுமைதாங்கி பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.
வழக்கம்போல் இன்று காலை பள்ளிச் சென்ற அந்தச் சிறுமி வகுப்பில் பாடங்களைக் கவனித்துவந்தார். அந்த சமயத்தில், ஆசிரியர் ஒருவர் பாடம் எடுக்கும்போது அதனைக் கவனித்தபடி அவர் வகுப்பறையில் அமர்ந்திருந்தார்.
திடீரென அவர் தனது அருகில் இருந்த மாணவி மீது சாய்ந்து விழுந்தார். இதனைக் கண்டதும், அந்த மாணவி பதறிப்போய் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையை அழைத்துள்ளார். உடனடியாக ஆசிரியை அந்த மாணவி அருகே சென்று பார்த்தபோது, மாணவி மயங்கி விழுந்தது தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து அந்த ஆசிரியை மற்ற ஆசிரியர்களை அழைக்க மாணவிக்கு பள்ளியிலேயே முதலுதவி செய்துள்ளனர். பிறகு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
#JUSTIN ராணிப்பேட்டை அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு#Ranipet #sumaithangi #school #News18Tamilnadu |https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/FNqqKzcL28
இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த மாணவியின் பெற்றோர் கதறி அழுத்தனர். மேலும், மருத்துவமனைக்கு வந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
மாணவிக்கு இதயப் பிரச்சினை இருந்ததாகவும், அதனால் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார் மாணவி வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.