இந்தியா

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பு? – பாலச்சந்திரன் விளக்கம்

Published

on

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாற வாய்ப்பு? – பாலச்சந்திரன் விளக்கம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது குறித்தும் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்தும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது; “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இது தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தினம் டெல்டா மாவட்டங்கள் கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

12ஆம் தேதி திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரை வடக்கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களின் எச்சரிக்கை பொறுத்தவரை குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடற்கரை பகுதி, தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று ஆனது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55 கிலோமீட்டர் வேகத்திலும் என 13ம் தேதி வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை தமிழகம், புதுவை, காரைக்காலில் அக்டோபர் 1 முதல் இன்று வரையில காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் 40 சென்டிமீட்டர் தான் இயல்பான மழை பொழிவு. ஆனால் தற்போது இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை 22 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 15 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 3 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்தார்.

Advertisement

“தற்போதைய சூழலில் இது புயலாக மாற வாய்ப்பு இல்லை” எனவும் “நாளை முதல் சென்னையில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version