இலங்கை
அமெரிக்காவின் தன்னார்வலர்கள் பலர் இலங்கையில் பதவிப் பிரமாணம்!
அமெரிக்காவின் தன்னார்வலர்கள் பலர் இலங்கையில் பதவிப் பிரமாணம்!
கடந்த வருடம் இடம்பெற்ற அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டத்தின் வரலாற்று ரீதியான மீள்தொடக்கத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள் வியாழக்கிழமை கொழும்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆழமடையும் அமெரிக்க இலங்கை பங்காண்மை மற்றும் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றம் தொடர்பான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இத்தன்னார்வலர்களின் குழுவானது சிங்களம் அல்லது தமிழ், இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவிடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற 12 வாரகால தீவிர பயிற்சியினை நிறைவுசெய்துள்ளது.
இலங்கை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து கிராமியப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதற்காக அவர்கள் எதிர் வரும் இரண்டு வருடங்களுக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றுவர்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்த கல்வியமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான நிமாலி பதுரலிய, அமைதிப்படையுடனான எமது ஒத்துழைப்பானது அனைத்து இலங்கையர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆங்கிலமொழிக் கல்வியை மேம்படுத்துகிறது.
எமது பாடசாலைகளுக்கும் சமூகங்களுக்கும் சேவையாற்றுகையில் தமக்கு முன்னாலுள்ள வளமான கலாச்சாரப் பரிமாற்ற வாய்ப்புகளைத் தழுவிக்கொள்ளுமாறு நான் இத்தன்னார்வலர்களை ஊக்குவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
கல்வியமைச்சினைச் சேர்ந்த மேலதிக செயலாளர் கலாநிதி நிஷாத் ஹந்துன் பத்திரனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார்.