இந்தியா

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது : தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

Published

on

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது : தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா.

Advertisement

இந்த ஆண்டுக்கான ’சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்க சென்னை மியூசிக் அகாடமி சார்பில் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”என் பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா கூறி வருகிறார். அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது எங்கள் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே, சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்று கோரியிருந்தார்.

Advertisement

இந்த மனுவை கடந்த நவம்பர் 19ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலில் அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்படவில்லை எனவும், தனக்கு சிலைகள், நினைவு சின்னம் அமைக்கக்கூடாது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்புலட்சுமியின் பேரன் சார்பில் “தனக்கு நினைவிடம், தனது பெயரில் அறக்கட்டளை அமைக்கக்கூடாது என சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ள நிலையில் அவரது பெயரில் விருதும் வழங்கக்கூடாது” என்று வாதிடப்பட்டது.

மேல்முறையீட்டு மனுதாரர் சார்பில், கடந்த பத்தாண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் விருது வழங்கக்கூடாது என தற்போது மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும் விருதுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டது.

Advertisement

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதிகள், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version