இலங்கை
பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்!
பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்!
பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை பின்வருமாறு…
கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.
எனது கல்வித் தகுதி குறித்து தான் இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.
ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.
எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன், பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினரான தலதா அத்துக்கோரள உள்ளிட்டோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்தநிலையில், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றையதினம் தெரிவித் திருந்தார்
மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில், சபாநாயகரின் தற்போதைய பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.