இந்தியா
கொட்டித்தீர்க்கும் மழை..! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொட்டித்தீர்க்கும் மழை..! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட சேத விவரங்களை துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும், அணைகளில் இருந்து நீரினை திறந்துவிடும்போது, பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்கவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும், துரிதமாக கணக்கிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படவுள்ள மழை குறித்தும், விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.