இந்தியா
பக்கா ப்ளான்.. அட்டவணை போட்டு அரங்கேறிய தற்கொலை.. பெங்களூரு ஐ.டி. ஊழியர் மரணத்தில் பகீர்!
பக்கா ப்ளான்.. அட்டவணை போட்டு அரங்கேறிய தற்கொலை.. பெங்களூரு ஐ.டி. ஊழியர் மரணத்தில் பகீர்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்கள் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போது சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
போலீசார் ஆய்வில் 24 பக்க தற்கொலை கடிதம் மற்றும் 90 நிமிடங்கள் வீடியோ பதிவு உள்ளிட்டவை கிடைத்துள்ளன. அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு அலைக்கழித்த சம்பவத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் தோறும் 2 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகவும் அதில் தெரிவித்திருந்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, தன் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், சுபாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன் பலமாதங்களாகத் திட்டமிட்ட தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு சற்று முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்திருந்தார். அதில் ஒவ்வொரு வேலையாக முடித்ததன் அடையாளமாக வரிசையாக டிக் செய்து குறித்து வைத்திருக்கிறார்.
அந்த அட்டவணையில் தனது செல்போனில் உள்ள கைரேகை மற்றும் முக அடையாள பதிவு ஆகியவற்றை அகற்றுவது, கார், பைக் மற்றும் ரூம் சாவிகளை பத்திரமாக எடுத்து வைப்பது. கம்பெனி லேப்டாப் மற்றும் சார்ஜரை ஒப்படைப்பது என அடுத்தடுத்த வேலைகளை முடித்ததன் அடையாளமாக டிக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனது சேமிப்பை பாதுகாப்பு செய்வது, இறப்பதற்கு முன் குளிப்பது, தற்கொலை கடிதத்தை மேஜை மேல் வைப்பது வரை அதில் குறித்துவைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சுபாஷின் தற்கொலைக் குறிப்பில் கொலைமுயற்சி, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அவரது மனைவியால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக தனது சாவுக்கும் தனது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அதில் சுட்டிக்காட்டியிருந்தார். உயிரிழப்பதற்கு முன் இவ்வளவு நேர்த்தியாக திட்டமிட்டவர் உயிர் வாழ என்ன செய்ய வேண்டும் என சற்று யோசித்திருந்தால் அனைத்து சவால்களையும் கடந்து வாழ்ந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.