இலங்கை
32 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்
32 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனி (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் அபுதாபியிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 21,400 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 107 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.