வணிகம்
பெண் கடன் பெறுநர்களுக்கு ஆண்களைக் காட்டிலும் நல்ல லோன் டீல்கள் கிடைப்பது எதனால் தெரியுமா…?
பெண் கடன் பெறுநர்களுக்கு ஆண்களைக் காட்டிலும் நல்ல லோன் டீல்கள் கிடைப்பது எதனால் தெரியுமா…?
கிரெடிட் இன்பர்மேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நடத்திய சமீபத்திய ஆய்வில் வெளியான தகவலின்படி, பெண்கள் சிறந்த கடன் பெறுநர்களாக இருப்பதாகவும், ஆண்களுடன் ஒப்பிடும்போது, அவர்களுக்கான கடன் அங்கீகரிப்பு விகிதம் அதிக அளவில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு குறைந்த வட்டியில் உடனடியாக கடன்கள் வழங்கப்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிபில் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடன் வாங்கும் பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் தங்களுடைய கடனை சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்துபவர்களாக உள்ளனர். அதாவது பெண்களின் திரும்பச் செலுத்தும் விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. இதனால் கடன் வழங்குனர்கள் பெண்களுக்கு தைரியமாக குறைந்த வட்டியில் பணத்தை கொடுக்கின்றனர்.
ஆண் கடன் பெறுநர்களோடு ஒப்பிடும்போது, பெண் கடன் பெறுநர்கள் சிறந்த கிரெடிட் வரலாற்றை கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய முந்தைய கடன் பேமென்ட்கள் மற்றும் குறைவான கிரெடிட் கார்டு பயனீட்டு விகிதம். மேலும், கடன் அங்கீகரிப்பில் கிரெடிட் ஸ்கோர் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நல்ல கிரெடிட் ப்ரொபைல் இருக்கும் காரணத்தால் பெண்களுக்கு ஆண்களுடன் ஒப்பிடும்போது, நல்ல லோன் டீல்கள் கிடைக்கின்றன.
அரசு மற்றும் பல பொருளாதார நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக பெண்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சில திட்டங்கள் பெண்கள் சுயதொழில் துவங்குவதற்காகவே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மானியங்கள், குறைவான வட்டி விகிதங்கள் மற்றும் பிற இன்சென்டிவ்கள் வழங்கப்படுகின்றன.
சிபில் வெளியிட்ட அறிக்கைகளின் படி, பெண் கடன் பெறுநர்கள் பொதுவாக கடன் தொடர்புடைய முடிவுகளை மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் எடுப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் அதிக அளவில் கடன்கள் வாங்குவதில்லை. மேலும் கடன் வாங்கும்போது, அவர்களுடைய பொருளாதார திறனை கருத்தில் கொள்கின்றனர். இது பொதுவாக ஆண் கடன் பெறுநர்களில் கவனிக்கப்படுவதில்லை.
பெண் கடன் பெறுநர்களுக்கு என்னதான் சிறந்த கடன் நிபந்தனைகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பொதுவாக பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு பொருளாதாரம் தொடர்புடைய அறிவுத் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக அமைகிறது.