இலங்கை

வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Published

on

வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

தற்போது இதன் மைய அமுக்கம் 1004 மில்லி பார் ஆக உள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் வடக்கு மற்றும் தமிழக கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையின் படி இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது அதனை விட தீவிரமாக மாறி எதிர்வரும் 18ம் திகதி அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

இத்தாழ்வுநிலை காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது (15 மற்றும் 16ம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்).

எதிர்வரும் 15-18 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 17, 18 மற்றும் 19ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் குளங்கள் மீண்டும் வான் பாயக்கூடும். இது இவ்வாண்டு வடகீழ் பருவக்காற்று காலத்தில் குளங்கள் வான் பாய்கின்ற மூன்றாவது சந்தர்ப்பமாக அமையக்கூடும்.

Advertisement

எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மேற்குறிப்பிட்ட காலங்களில் கிடைக்கவுள்ள கன மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் நாளை பிற்பகல் முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

அதேவேளை எதிர்வரும் 17 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வடக்கு மாகாணத்தின் ஊடாக கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடலில் காணப்படுவதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு கிடைத்த கன மழை நாளையும் சற்று மிதமான அளவில் சில பகுதிகளுக்கு மட்டும் கிடைக்கும்.

அதேவேளை எதிர்வரும் 20ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா அச்சே மாநிலத்திற்கு மேற்காக மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version