இந்தியா
வரலாறு காணாத விலை உயர்வு… ஒரு கிராம் தங்கத்துக்கு இணையாக விற்பனையாகும் மல்லிகைப் பூ…!!
வரலாறு காணாத விலை உயர்வு… ஒரு கிராம் தங்கத்துக்கு இணையாக விற்பனையாகும் மல்லிகைப் பூ…!!
ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.7500
சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ வரலாறு காணாத அளவிற்கு, ஒரு கிலோ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நாளின் ஒரு கிராம் தங்கத்தை விட மல்லிகை பூ அதிகம் என மக்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த சில தினங்களாக தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு பூக்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும் மல்லிகை பூவின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு வரக்கூடிய மல்லிகை பூ குறைந்ததாலும், இந்த மாதத்திற்கான கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும் மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக மல்லிகை பூவின் விலை கிலோ 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது திடீரென விலை இரட்டிப்பு ஆனதால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு குறைந்த அளவு பூக்கள் வந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவு பூக்கள் கொள்முதல் செய்யப்படுவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.