இலங்கை

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்!

Published

on

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்!

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் போலீசார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காரைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (14) தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர் ,

தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு , உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த , அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்டுள்ளார். அதனால் அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார்.

Advertisement

சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் , கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரிய நிலையில் அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.

அதன் பின்னர் , அவரது கணக்கில் இருந்து 05 தடவைகள் 40 ஆயிரம் ரூபாயும் , அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபாய் , 06 ஆயிரம் ரூபாய் என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நபர் , வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது , பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால் , யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது , அதனை உங்கள் பிரிவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறி பாதிக்கப்பட்டவரை பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.

அதன்பின்னர் அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்ற போது , வங்கி மானிப்பாய் பகுதி என்பதால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையம் சென்ற போது , வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் வருகிறது எனவே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

Advertisement

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்ற போது , முறைப்பாட்டை எழுத தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இல்லை என கூறி பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பாட்டை எந்த பொலிஸ் நிலையமும் ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவர் க்வலை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version