இந்தியா
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்; தூத்துக்குடி மாணவர்கள் அவதி
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்; தூத்துக்குடி மாணவர்கள் அவதி
தூத்துக்குடி மில்லர்புரத்தில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில், தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழை விட்டு மூன்று நாட்கள் கடந்தும் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது.
குறிப்பாக மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தண்ணீரில் நடந்தே சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்து வரும் நிலையில், வாகனங்கள் தண்ணீரில் பழுதாகி நிற்கும் நிலையும் காணப்படுகிறது. மேலும், தேங்கியுள்ள மழை நீரில் கழிவு நீரும் கலந்து உள்ளதால் மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால், ஏரல் – குரும்பூர் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து தரைப்பாலத்திற்கு கீழ் தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் சென்றதில் பாலத்தின் நடுவே சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் வடிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.