இந்தியா
“700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிற்பம் கண்டுபிடிப்பு” – பாண்டியர்களின் 14-ஆம் நூற்றாண்டின் பொக்கிஷம்…
“700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிற்பம் கண்டுபிடிப்பு” – பாண்டியர்களின் 14-ஆம் நூற்றாண்டின் பொக்கிஷம்…
700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிற்பம் கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் பழமையான அம்மன் சிற்பம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் ஆ.மீனாட்சி சுந்தரம் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு அந்த சிற்பம் பிற்காலப் பாண்டியர்களின் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிற்பம் என்று கண்டறிந்தனர்.
சிவ முக்கூர்த்தங்கள் 64, அதில் பைரவரும் ஒன்று. இங்குள்ள பைரவர் சிற்பம் 3 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் உள்ளது. நான்கு கரங்களுடன் பின் வலது கரத்தில் உடுக்கையும், பின் இடது கரத்தில் பாசக்கயிறும், சூலாயுதம் உள்ளது. முன் வலது கரம் சிதைந்து, முன் இடது கரத்தில் கபாலம் உள்ளது.
இந்த சிற்பத்தில் உடம்பில் உள்ள ஆபரணங்கள் தெளிவாக தெரியவில்லை. தலையின் பின்புறம் தீச்சுடர் செதுக்கப்பட்டுள்ளது. அம்மன் தெய்வமாக வழிபட்டு வரும் இந்த சிற்பம் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்த பைரவர் சிற்பம் என்றும், இதன் எதிரே உள்ள நந்தி பெருமான் சிலையும் இந்த சிற்பம் இங்கு அமைக்கும்போது அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.