இந்தியா

Aadhav Arjuna | “அரசியல் பயணம் தொடரும்” – எதிர்காலத் திட்டம் குறித்து விவரித்த ஆதவ் அர்ஜுனா!

Published

on

Aadhav Arjuna | “அரசியல் பயணம் தொடரும்” – எதிர்காலத் திட்டம் குறித்து விவரித்த ஆதவ் அர்ஜுனா!

Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்து பேசியது சர்ச்சையாக கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனால் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டிகள் மீண்டும் வைரலானது. அதில் திருமாவளவன் குறித்தும், திமுக குறித்தும், விசிக குறித்தும் மீண்டும் பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் தொடர்ந்து இப்படிப் பேசி வருவது அவருக்கு என்னவோ ஒரு மறைமுக செயல்திட்டம் இருப்பதாக தெரிகிறது.

ஆறு மாதத்திற்கு பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

Advertisement

திருமாவளவனின் இந்த குற்றச்சாட்டு வெளியான சில மணி நேரங்களில் விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்தார். கட்சியில் இருந்து விலகுவது ஏன் என்று நீண்ட விளக்கத்தை அறிக்கையாகவும் வெளியிட்டார்.

அதே அறிக்கையில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். அதில், “இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் ‘சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்’ அரசியல் போராட்டங்களில் திருமாவளவனுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version