உலகம்
அமெரிக்காவின் தனியார் பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!
அமெரிக்காவின் தனியார் பாடசாலையில் துப்பாக்கி சூடு; இருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் அமைந்துள்ள தனியார் கிறிஸ்தவப் பாடசாலையில் மாணவர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர் மற்றும் ஆசிரியர் ஒருவரும், பதின்ம வயது மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதையுடைய மாணவியே திங்கட்கிழமை (16) இரவு துப்பாக்கி சூட்டினை நடத்தியதாக விஸ்கான்சின், மேடிசன் நகர காவல்துறைப் பொறுப்பாளர் ஷோன் பார்ன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு சம்பவம் நடைபெற்ற அபண்டன்ட் லைஃப் கிறிஸ்டியன் பாடசாலையில் இருந்ததாகவும், சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை பொலிஸார் இன்னும் கண்டறியவில்லை. சந்தேக நபரின் குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் ஷோன் பார்ன்ஸ் மேலும் கூறினார்.
அந் நாட்டு நேரப்படி திங்களன்று 11:00 மணியளவில் (17:00 GMT) கிறிஸ்டியன் பாடசாலையின் பரபபரப்பான வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கலப்பு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களைக் கொண்ட ஒரு ஆய்வு கூடத்திலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.