சினிமா
மணிக்கு ரூ. 5 லட்சம்? அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வக்கீலின் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?
மணிக்கு ரூ. 5 லட்சம்? அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வக்கீலின் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?
புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஜாமீன் பெற்று கொடுத்த வழக்கறிஞர் பெற்ற கட்டணம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள புஷ்பா 2 என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் கடந்த 5-ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பாக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பிரீமியர் ஷோ காட்டப்பட்டது.
இதற்கு அல்லு அர்ஜுன் வந்ததால் மிகப்பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்த 35 வயதான ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தாருக்கு அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கினார்.
இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக அல்லு அர்ஜுன் இருந்தார் என்று குற்றம் சாட்டி அவரை கைது செய்தது. இந்த சம்பவம் ஆந்திராவையும் தாண்டி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அல்லு அர்ஜுன் வழக்கில் மூத்த வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி ஆஜராகி வாதிட்டார். அவருக்கு மணிக்கணக்கில் கட்டணம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அல்லு அர்ஜுன் வழக்கில் அவர் ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.