இலங்கை
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் சமூக நலத்திட்டம்!
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் சமூக நலத்திட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் நேற்று திங்கட்கிழமை(16) யாழ்ப்பாண மாநகரசபை சுத்திகரிப்பு உத்தியோகத்தர்கள் 44 பேருக்கான பாதுகாப்புக் காலணிகளும் , 10மேற்பார்வையாளர்களுக்கான பாதுகாப்புத் தலைக்கவசங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மேற்படி பொருட்களானவை லண்டனில் வசிக்கும் கனகசபாபதி விநாயகமூர்த்தி என்பவரால் அன்பளிப்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியமூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டங்கள் தேவைப்படுகின்றன. அவை இயன்றவரை பலரால் மேற்கொள்ளப்பட்டும் வருகின்ற நிலையில் அனர்த்தங்களினைத் தவிர்ப்பதற்கு களத்தில் நின்று போராடும் சுத்திகரிப்பு உத்தியோகத்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதென்பது அவர்களை ஊக்கப்படுத்துவதும் அனர்த்தத்தினை குறைப்பதற்குமான செயற்பாடாகும்.
கடந்த வெள்ள அனர்த்தம் , தற்போது எலிக்காய்ச்சல் என்பன மத்தியில் சமூகத்தின் பாதுகாப்பிற்காகச் செயற்படுபவர்களை வலுவூட்டுவதற்காக இவை வழங்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் , யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் , யாழ்ப்பாண மாநகரசபை பொறியியலாளர் , யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் , கலைப்பீட மாணவர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச)