இந்தியா
Weather Update: தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்!
Weather Update: தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்!
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த சூழலில், வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளைக்குள் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் கடலில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதி மீனவர்களும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு நங்கூரமிட்டு பத்திரமாக நிறுத்த வேண்டும் என்றும், நாட்டுப் படகுகளை பாதுகாப்பாக கரையேற்றி வைத்து விட வேண்டும் என்றும் மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.