இந்தியா
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; இ.பி.எஸ்.-ஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; இ.பி.எஸ்.-ஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தற்போதைக்கு அவசியம் இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் அமர்வில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முரளி, ரம்பா உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் தற்போது புலன் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றும், “பிறகு அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும்” எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“எதிரி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும் போது, தேவைப்பாட்டால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தற்போதைக்கு அவர்களை விசாரிக்க அவசியமில்லை” என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.