விளையாட்டு
Ashwin: ‘நான் தேவையில்லையெனில்..’ அஸ்வின் ஓய்வு முடிவை எடுத்தது எப்போது? – ரோகித் பகிர்ந்த சீக்ரெட்!
Ashwin: ‘நான் தேவையில்லையெனில்..’ அஸ்வின் ஓய்வு முடிவை எடுத்தது எப்போது? – ரோகித் பகிர்ந்த சீக்ரெட்!
ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி இன்று டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த அறிவிப்பை அவர் வெளியிடும்போது, “இதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எனது கடைசி நாளாக இருக்கும். எனக்குள் இன்னும் ஒரு கிரிக்கெட்டர் இருக்கிறார். அதை நான் உள்ளூர் போட்டிகளில் தான் இனி காட்ட முடியும்.
இதுவரை ரோகித் சர்மா உள்ளிட்ட எனது சக வீரர்களுடன் நான் நிறைய நினைவுகளை உருவாக்கியுள்ளேன். அவர்களில் பலரை கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்துள்ளேன். நாங்கள் தான் கடைசி ‘OG’ களாக இருப்போம் என நினைக்கிறேன். இத்தனை நாள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிசிசிஐக்கும், எனது சக வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.” என தெரிவித்தார். அஸ்வினின் ஓய்வை அறிவித்ததும், ரோகித் சர்மா சற்று வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ஆரத்தழுவி வழியனுப்பினார்.
இதன்பின்னர் பேசிய ரோகித் சர்மாவிடம் அஸ்வினின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, “முதல் டெஸ்ட் போட்டி நடந்த பெர்த்துக்கு நான் வந்த போதே என்னிடம் அஸ்வின் தனது ஓய்வு முடிவை தெரிவித்துவிட்டார். அணிக்காக யோசிக்கக்கூடியவர் அஸ்வின். ஆடும் லெவனில் எந்த வீரர்கள் இறங்கினால் நன்றாக இருக்கும், எந்த காம்பினேஷன் அணியின் நலனுக்கு நல்லது என அனைத்துமே அஸ்வினுக்கு தெரியும்.
அதனால், அவராகவே முன்வந்து ‘இங்கே நான் தேவையில்லையெனில் ஓய்வை அறிவிக்க போகிறேன்.’ எனக் கூறினார். நான் தான் அஸ்வினை சமாதானப்படுத்தி பிங்க் பால் டெஸ்டில் விளையாட வைத்தேன். இந்திய அணியில் அஸ்வின் சீனியர். அவருடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இந்திய அணி கண்ட மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர். எனவே, அவரின் முடிவை மதிக்க வேண்டியது நமது கடமை” என்று கூறி சீக்ரெட்டை பகிர்ந்துகொண்டார்.