விளையாட்டு
மீடியா அனுபவம் இல்லாத பேச்சு.. என் அப்பாவை மன்னித்து விடுங்கள் – அஸ்வின்
மீடியா அனுபவம் இல்லாத பேச்சு.. என் அப்பாவை மன்னித்து விடுங்கள் – அஸ்வின்
டெஸ்ட் ஓய்வு அறிவிப்பு குறித்து தனது தந்தை அளித்துள்ள பேட்டிக்கு அஷ்வின் கொடுத்துள்ள ரியாக்சன் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நிறைவு பெற்றது.
இந்த போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டார். குறைந்தது இந்த தொடரை முடித்துக் கொண்டு அவர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அஸ்வின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில், அஸ்வின் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் ஓய்வை அறிவித்து விட்டார். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரது அறிவிப்பு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும் இன்னொரு வகையில் அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று கருதுகிறேன்.
அஸ்வினின் முடிவில் நான் தலையிட முடியாது. ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று அஸ்வினுக்கு மட்டும்தான் தெரியும். அவமானம் கூட அவர் ஓய்வை அறிவித்ததற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அஸ்வினின் தந்தை அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உண்மையிலேயே அஸ்வின் அவமதிக்கப்பட்டதால் தான் ஓய்வை அறிவித்தாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அஸ்வின் ரசிகர்கள் ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே, பிரபல விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி ராமன் அஸ்வின் தந்தையின் பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
My dad isn’t media trained, dey father enna da ithelaam 😂😂.
I never thought you would follow this rich tradition of “dad statements” .🤣
Request you all to forgive him and leave him alone 🙏 https://t.co/Y1GFEwJsVc
அதனை ரீ ட்வீட் செய்துள்ள அஷ்வின், ‘எனது தந்தைக்கு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அனுபவம் கிடையாது… என்ன அப்பா இதெல்லாம்!! எனது தந்தையை மன்னித்து அவர் தனிமையில் இருக்க அனுமதியுங்கள்’ என்று கூறியுள்ளார். அஷ்வினின் இந்த கிண்டலான பதிவு எக்ஸ் தளத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.