வணிகம்
சபரிமலை சீசனில் அதிகரித்த சிப்ஸ் உற்பத்தி… மேட்டுப்பாளையத்தில் நேந்திரன் விற்பனை அமோகம்…
சபரிமலை சீசனில் அதிகரித்த சிப்ஸ் உற்பத்தி… மேட்டுப்பாளையத்தில் நேந்திரன் விற்பனை அமோகம்…
சபரிமலை சீசனில் அதிகரித்த சிப்ஸ் உற்பத்தி.. மேட்டுப்பாளையத்தில் நேந்திரன் விற்பனை அமோகம்..
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதையொட்டி கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் பணி அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 11-ஆம் தேதி ஏல மையத்திற்குச் சுமார் 3,300 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தது. அதில் 1400 நேந்திரன் வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அன்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன் ஒரு கிலோ ரூ.65 இல் இருந்து ரூ.70 வரை விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அன்று நடைபெற்ற ஏலத்திற்கு மேட்டுப்பாளையம், கருவலூர், புளியம்பட்டி, பவானிசாகர் மத்தம்பாளையம், வீரபாண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில் சுமார் 3500 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தது.
அதில் நேந்திரன் 1500 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். நேந்திரன் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. ஏலத்தில் பாலக்காடு, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கூறினார்கள்.
நேந்திரன் ஒரு கிலோ ரூபாய் 50 இல் இருந்து ரூபாய் 55 வரை விற்பனையானது. மேலும், ஏலத்தில் கதலி ஒரு கிலோ ரூபாய் 25 இருந்து ரூபாய் 30 வரையிலும், பூவன் ஒரு தார் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 500 வரையிலும், செவ்வாழை ஒரு தார் ரூபாய் 800 இல் இருந்து ரூபாய் 1000 வரையிலும், தேன் வாழை ஒரு தார் ரூபாய் 250 லிருந்து ரூபாய் 550 வரையிலும் விற்பனையானது.
மேலும், ரொபஸ்டா ஒரு தார் ரூபாய் 150 லிருந்து ரூபாய் 400 வரையிலும், மொந்தன் ஒரு தார் ரூபாய் 150 லிருந்து ரூபாய் 350 வரையிலும், பச்சைநாடன் ஒரு தார் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 450 வரையிலும், ரஸ்தாளி ஒரு தார் ரூபாய் 200 லிருந்து ரூபாய் 550 வரையிலும் விற்பனையானது.
கடந்த வயநாடு நிலச்சரிவின் போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் மேட்டுப்பாளையம் ஏல மையத்திற்கு நேந்திரன் வாழைத்தார் வரத்து குறைந்தும் விலையும் குறைந்து காணப்பட்டதால் வாழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
ஆனால், தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதால் கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் மேட்டுப்பாளையம் ஏல மையத்திற்கு நேந்திரன் வாழைத்தார் வரத்தும் அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் அதிகரித்துக் காணப்படுவதால் நேந்திரன் வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.