இலங்கை
உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் நடத்துக!
உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் நடத்துக!
சாதாரணதரப் பரீட்சையைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சித் தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் எனவும், இதன்படி மே மாதத்தில் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை, நாடாளுமன்ற அனுமதி மற்றும் வேட்புமனு கோரல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவிலேயே தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும். ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்குரிய சாத்தியமே இல்லை. தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கூறினாலும், காலப்பகுதியை நிர்ணயிக்கும்போது அரசாங்கத்தின் தரப்பில் சாதாரணதரப் பரீட்சையை கவனத்தில் எடுக்கவில்லைபோல் தெரிகின்றது.
மார்ச் 15ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகின்றது. ஏப்ரல் 5ஆம் திகதிவரை அந்தப் பரீட்சை நடைபெறும். இந்த நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் பரீட்சைக்கு மத்தியிலேயே தேர்தலும் இடம்பெறும். இது தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். எனவே, சாதாரணதரப் பரீட்சையை தேர்தலுக்கு மத்தியில் நடத்த வேண்டாம்.
சூறாவளி எச்சரிக்கையால் உயர்தரப்பரீட்சையை பிற்போடுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், கல்வி அமைச்சரான பிரதமர், பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது என அறிவித்தார். இறுதியில் பரீட்சை நடத்தப்பட்டது. புயலும் வந்தது. பரீட்சையை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாதாரணதரப் பரீட்சைக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது – என்றார். (ச)