இந்தியா
தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி
தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்ற நிலையில் நேற்றுடன் 117ஆவது அத்தியாயத்தை எட்டியுள்ளதுடன் இந்தாண்டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
இதில் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும் என்றும் இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான, பெருமை சேர்க்கும் விடயம் என்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த மாத இறுதியில் ஃபிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 80 ஆண்டுகளில் ஃபிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்றுவிப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும், ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெருமிதத்தால் நிரப்புபவை – என்றார். (ச)