இலங்கை
வடமராட்சியில் மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு; வெளியான தகவல்!
வடமராட்சியில் மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு; வெளியான தகவல்!
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் கடந்த 23ஆம் திகதி மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த படகு 23ஆம் திகதியன்று ஆட்கள் யாருமற்று கடலில் மிதந்துவந்து கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிஸார் படகை பார்வையிட்டதுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர்.
இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து வருகை தந்து கரையொதுங்கிய இலங்கை நாட்டிற்கு சொந்தமான குறித்த படகை கடத்தல்காரர்கள் கையாண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகித்து மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குறித்த படகு கரையில் இருந்து, கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டே உடுத்துறை ஐந்தாம் பனையடியில் கரையொதுங்கியதாக பொலிசார் விசாரணைகளின்பின் தெரியவந்துள்ளதுடன் படகின் உரிமையாளர் செம்பியன்பற்று தனிப்பனையை சேர்ந்தவரென்றும் தகவல் வெளியாகி உள்ளது.