இந்தியா
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, திமுக நிர்வாகி வீட்டில் ரூ.11 கோடி பணம் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இன்று (ஜனவரி 3) அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பூஞ்சோலை சீனிவாசன். இவர் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை பிரிவில் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர் மீது கடந்த 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் வருமான வரித்துறை சோதனை நடத்தி ரூ.11 கோடி பணத்தை பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும், சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருடன் வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று காட்பாடி காந்திநகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிலும் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே வீட்டில் தான் திமுக எம்.பி. கதிர் ஆனந்த்தும் வசித்து வருகிறார்.
அமலாக்கத்துறையின் சோதனையை அறிந்து ஏராளமான திமுகவினர் துரைமுருகன் வீட்டின் முன்பு குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.