இலங்கை
சுண்ணக்கல் பாரவூர்தியால் சாவகச்சேரியில் பரபரப்பு!
சுண்ணக்கல் பாரவூர்தியால் சாவகச்சேரியில் பரபரப்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சிமெந்துத் தொழிற்சாலைக்கு நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பாரவூர்தியைப் பின்தொடர்ந்து காரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வீதிக்குக் குறுக்காக காரை நிறுத்திப் பாரவூர்தியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்ததாவது:
அண்மைக்காலமாக சட்டவிரோதமாக சுண்ணக்கல் அகழ்வும், கடத்தலும் இடம்பெறுகின்றது என்று கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தி பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -என்றார்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் உரிமையாளர் தெரிவித்ததாவது:
நாம் சட்டவிரோத சுண்ணக்கல் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. முறையான அனுமதிகள் பெற்று உரிய ஆவணங்களுடன்தான் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அச்சுறுத்தும் வகையில் எம்மைப் பின்தொடர்ந்ததுடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். உரிய ஆவணங்களை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
அத்துடன், விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரைச் செலுத்தி, அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது – என்றார்.
இதேவேளை, வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த சுண்ணக்கல்லின் மாதிரிகள் கனியவள திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)