இந்தியா
மதுரை, ஈரோடு, திருச்சி… : மாற போகும் மாவட்டங்கள் : கட்கரி முக்கிய அறிவிப்பு!
மதுரை, ஈரோடு, திருச்சி… : மாற போகும் மாவட்டங்கள் : கட்கரி முக்கிய அறிவிப்பு!
ஈரோடு, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்தியமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை இன்று (ஜனவரி 3) காலை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கம் மூலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டங்களில் சாலைகள் பணிகளுக்காக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை 20ஐ பிரிக்கப்பட்ட இரு வழிப்பாதையாக மாற்றவும், மழைநீர் வடிகால் பணிக்காகவும் ரூ. 36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் சாலையை மேம்படுத்த 4.2 கி.மீ.க்கு தடுப்புச்சுவர் கட்ட, ரூ. 6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாநில NH-154ஐ அகலப்படுத்தவும், பலப்படுத்தவும், 6 கி.மீ. தொலைவுக்குப் பாதுகாப்பு மற்றும் வடிகால் பணிகள், மண்டல சாலை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், 9.4 கி.மீ தொலைவு இணைப்பை மேம்படுத்தும் வகையில், மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை ஒற்றைப் பாதையில் இருந்து இருவழி பாதையாக விரிவுப்படுத்தவும் ரூ. 20.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், தர்மத்துப்பட்டி-ஆடலூர்-தாண்டிக்குடி சாலையை மேம்படுத்தவும், புனரமைப்பு மற்றும் தடுப்புச்சுவர் கட்டுதல் என பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ரூ. 5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த உள்கட்டமைப்பு போக்குவரத்து திறனை மேம்படுத்தும், பயண நேரத்தை குறைக்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் மாநிலம் முழுவதும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.