இந்தியா

செப்டிங் டேங்கில் விழுந்து குழந்தை பலி : அமைச்சர் கொடுத்த காசோலையை வீசி எறிந்த தாய்!

Published

on

செப்டிங் டேங்கில் விழுந்து குழந்தை பலி : அமைச்சர் கொடுத்த காசோலையை வீசி எறிந்த தாய்!

விழுப்புரத்தில் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாயார் அமைச்சர் பொன்முடி கொடுத்த நிதியுதவியை வாங்க மறுத்து, காசோலையை வீசி எறிந்தார்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் செயல்பட்டு வந்த செயிண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மூன்றாம் வகுப்பு மாணவி நேற்று (ஜனவரி 3) செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன.

Advertisement

ஆனால் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் பழனிவேல் – சிவசங்கரி குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இன்று (ஜனவரி 4) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் அறிவித்த நிதியுதவிக்கான காசோலையையும் வழங்கினார்.

Advertisement

ஆனால் சிறுமியின் தாயார் சிவசங்கரி, கையெடுத்து கும்பிட்டு எனக்கு இந்த பணம் வேண்டாம் என்று வாங்க மறுத்தார்.

“யாருக்கு சார் வேணும் இந்த பணம்? 9 மாசமா குழந்தை இல்லை சார்.. போற வறவங்க எல்லாம்.. ஒரு புழு பூச்சி இல்லையானு கேப்பாங்க.. தவமா தவமிருந்து பெத்தேன். கோடி ரூபாய் கொடுத்தா கூட என் புள்ளைக்கு ஈடாகாது” என்று கையெடுத்து கும்பிட்டவாறே அந்த பணத்தை வாங்க மறுத்தார்.

அப்போது அமைச்சர் பொன்முடி, உரிய நடவடிக்கை எடுக்குறோம்.. வாங்கிக்கோங்க என்று ஆறுதல் கூறியும் சிறுமியின் தாயார் திட்டவட்டமாக வாங்க மறுத்தார்.

Advertisement

இந்நிலையில், அருகில் இருந்த சிறுமியின் உறவினர் அந்த காசோலையை வாங்கி தாயார் சிவசங்கரியிடம் கொடுத்த நிலையில், பொன்முடி அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது தான் கையில் வைத்திருந்த காசோலையை சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியின் மீது தூக்கி எறிந்த தாயார் சிவசங்கரி, அருகில் இருந்த தனது உறவினரிடம், “மாமா இது எதுக்கு நமக்கு?” என்று மனமுடைந்து கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version