இந்தியா

ஹெச்எம்பிவி… சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்: நீலகிரி ஆட்சியர்!

Published

on

ஹெச்எம்பிவி… சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்: நீலகிரி ஆட்சியர்!

ஹெச்எம்பிவி வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய புதிய தொற்று வேகமாக பரவி வருகிறது.

Advertisement

இந்தியாவில் முதன்முறையாக, கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தைக்கும் 8 மாத ஆண் குழந்தைக்கும் ‘எச்எம்பிவி’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாத ஆண் குழந்தைக்கும் ‘எச்எம்பிவி’ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கர்நாடகாவை ஒட்டி உள்ளதாலும் பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவதாலும், நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, “பெங்களூரில் இரண்டு பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பரவி இருக்கிறது.

இதனால், அந்த வைரஸ் பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது குறித்து ஒரு அறிக்கை சுகாதாரத்துறை தயாரித்து வருகிறது.

Advertisement

அதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவார்கள்.

உள்ளூர் மக்களிடம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது அவசியம்.

அதேபோல் பொங்கல் விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தால் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்படும். இதுகுறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.

Advertisement

அதேபோல் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் தங்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி சமையல் செய்வதும், தூங்குவதும் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு உள்ளூர் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு அதிகாரிகள். போலீஸார், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளூர் மக்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழு, பேருந்துகளை நகருக்குள் அனுமதிக்காமல் அந்தந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கவும், சுற்றுலா பயணிகள் அரசு பேருந்துகளில் முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version