இலங்கை
அரச சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பாதீட்டில் நிதி; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
அரச சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பாதீட்டில் நிதி; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
அரச சேவையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் உரிமை என்றவகையிலும், அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
தற்போதுள்ள அரச சேவையில் நாட்டு மக்கள் திருப்தியடையவில்லை. அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாக மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்க்கின்றோம்.
எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் அரச சேவையில் சரியான தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதற்காகச் செயலாற்றுகின்றோம். தற்போதுள்ள அரச சேவையின் தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்குரிய இயலுமை இல்லை.
அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்கு முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்.
அரச சேவையில் தற்போதுள்ள சுமார் 30 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், எதிர்வரும் வரவு=செலவுத் திட்டத்தில் தேவையான நிதியை ஒதுக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது-என்றார்.