விளையாட்டு

திடீரென செயலிழந்த ஃப்ளட்லைட்; 35 நிமிடம் ஆட்டம் நிறுத்தம்: ஒடிசா கிரிக்கெட் சங்கத்துக்கு அரசு அதிரடி உத்தரவு

Published

on

திடீரென செயலிழந்த ஃப்ளட்லைட்; 35 நிமிடம் ஆட்டம் நிறுத்தம்: ஒடிசா கிரிக்கெட் சங்கத்துக்கு அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England ODI: Explain floodlight malfunction, Odisha govt asks cricket bodyஇந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில்  நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து  49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 305 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்தியா 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 119 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.இந்த நிலையில், கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட இடையூறு குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒடிசா அரசு ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு (ஓ.சி.ஏ) இன்று திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்திய அணி 305 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கைத் துரத்தும்போது மைதானத்தில் இருந்த ஃப்ளட்லைட் செயலிழந்தது. இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லாங்-ஆன் பவுண்டரியைத் தாண்டி இருந்த ஃப்ளட்லைட் செயலிழந்தது. இதனால், போட்டி 35 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் டக்அவுட்டுக்கு சென்றதால், இங்கிலாந்து அணியும் இதைப் பின்பற்றியது. இதனால், போட்டி அமைப்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அந்த இடத்தில் இருந்த ஆறு ஃப்ளட்லைட் கட்டமைப்புகளில் ஒன்றிற்கு இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் செயலிழந்ததால், கிட்டத்தட்ட 35 நிமிடம் போட்டி நிறுத்தப்பட்டதாக  ஒடிசா கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். “இந்தச் சம்பவத்தால் ஆட்டம் சுமார் 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது, இதனால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இடையூறுக்கான காரணத்திற்கான விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்கவும், இதுபோன்ற தவறுகளுக்கு காரணமான நபர்கள் / ஏஜென்சிகளை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டவும் ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ”என்று ஒடிசா விளையாட்டுத் துறை ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியை நடத்திய பாராபதியில் சர்வதேச போட்டிகளை நடத்துவதில் ஒடிசா கிரிக்கெட் சங்கத்தின் திறமை குறித்தும் இந்த சம்பவம் பெரும் கவலையை எழுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம், ஒடிசாவில் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி)  சர்வதேச போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பா.ஜ.க அரசாங்கத்தின் செயல்பாடுகளை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version