இந்தியா
இலங்கைக் கடற்பரப்பில் வாரத்தில் மூன்று நாள்களில் மீன்பிடிக்க அனுமதி தேவை!
இலங்கைக் கடற்பரப்பில் வாரத்தில் மூன்று நாள்களில் மீன்பிடிக்க அனுமதி தேவை!
தமிழக காங்கிரஸ் வலியுறுத்து
வாரத்தில் மூன்று நாள்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாகக் கைதுசெய்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், அதற்கு மத்திய அரசாங்கத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழகக் கடற்பரப்பில் போதிய மீன்கள் இல்லாத காரணத்தாலேயே, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த வேண்டுமாயின், இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை இந்திய மத்திய அரசாங்கம் மீள உறுதிப்படுத்த வேண்டும்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில், கடந்த 2013ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்பரப்பில் வாரத்தில் சில நாள்கள் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான பின்னர் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. மன்மோகன் சிங் முன்னெடுத்த விடயங்களை தற்போதை பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் – என்றார்.