நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 26/02/2025 | Edited on 26/02/2025
ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவான ‘கேம் சேஞ்ஜர்’ படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்க எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதிய நிலையில், அவர் மதுரையில் ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் நடந்ததை அடிப்படையாக வைத்து எழுதியதாக எஸ்.ஜே.சூர்யா கூறியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.186 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் இப்படத்தில் நடித்த 350 நபர்கள் சம்பள பாக்கி இருப்பதாக குண்டூர் காவல் நிலையத்தில் படக்குழு மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில், ஹைதராபாத்தில் படப்பிடிப்பிற்காக சென்றதாகவும் அதற்காக இணை இயக்குநர் ஸ்வர்கம் சிவா ஒரு நபருக்கு ரூ.1200 வழங்குவதாக உறுதியளித்து பின்பு ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஷங்கரும் தில் ராஜூவும் இதில் தலையிட்டு தங்களுக்கு வர வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்க உதவுமாறும் இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.