நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் ‘ஈசன் ப்ரொடக்ஷன்’ என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக ஈசன் ப்ரொடக்ஷன், 3.74 கோடி ரூபாய் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கடன் ஒப்பந்தத்தின் பொழுது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும் என் தம்பி பிரபுவிற்குத் தான் அந்த வீடு சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனு தக்கல் செய்யவும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதை கேட்ட நீதிமன்றம், ஜப்தி உத்தரவை நிறுத்தி வைத்து இந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் பேசி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி ராம்குமார் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதி ஒத்திவைத்தது.