இந்தியா
பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவர்களுக்கு மரண தண்டனை!
பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவர்களுக்கு மரண தண்டனை!
பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவருக்கு மரணத் தண்டனை வழங்குவதற்காக மாநிலத்தின் மதமாற்ற தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணிகளை பாஜக அரசு திட்டமிட்டுவருவதாக இந்தியாவின் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
போபாலில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் மபி முதல்வர் மோகன் யாதவ் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதைக்காக நமது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களுக்கு (பாலியல் வன்கொடுமை) மரண தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளை கட்டாய மத மாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
சிறுமிகளை கட்டாய மத மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு மத்தியப் பிரதேசத்தின் மதமாற்றத் தடைச் சட்டம் 2021இல் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.” என்றார்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியும் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினருமான விவேக் தன்கா தெரிவித்ததாவது:
“தவறான வழிகளில் மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். இது ஏற்கெனவே சட்டத்தில் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அரசிலமைப்பு ரீதியான கண்ணோட்டத்தில் தூக்கிலிடுவது சாத்தியமல்ல. முதல்வர் தனது தீவிர ஆதரவாளர்களை திருப்திபடுத்த முயற்சிக்கிறார்.” என்று தெரிவித்தார்.
‘லவ் ஜிஹாத்’ மூலம் நடத்தப்படும் சட்டவிரோத மதமாற்றங்களை எதிா்த்துப் போராடுவதற்காக சட்ட விரோத மதமாற்றத் தடைச் சட்டத்தை மத்திய பிரதேச அரசு கடந்த 2021ஆம் ஆண்டு இயற்றியது. இச்சட்டம் எந்த ஒரு தனிநபரின் தூண்டுதல், அச்சுறுத்தல், வலுக்கட்டாயம், மிரட்டல், வற்புறுத்தல், மோசடி மூலம் மதத்தை மாற்ற முயற்சித்தல் அல்லது சதி செய்வது பிணையில் வெளிவரமுடியாதக் குற்றமாக்குகிறது.
கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 25,000 ரூபா முதல் ஒரு இலட்சம் அபராதத்துடன் 1 வருடம் முதல் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.