இலங்கை
விரைவில் அரசியலமைப்பு உருவாக்கப்படுவது உறுதி;
விரைவில் அரசியலமைப்பு உருவாக்கப்படுவது உறுதி;
நீதி அமைச்சர் ஹர்ஷன நம்பிக்கை
புதிய அரசியலமைப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை. காலத்தை இழுத்தடிக்கும் நோக்கமும் எமக்குக் கிடையாது – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
உரிய ஆய்வுகளுக்குப் பிறகே வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் முன்வைத்தோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உட்பட புதிய அரசியலமைப்பு தொடர்பில் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை. எனினும், எதிரணிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய எம்மால் செயற்பட முடியாது.
ஐந்து வருடங்களுக்குரிய திட்டங்களே தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எல்லா விடயங்களும் முதல் ஐந்து மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என நாம் கூறவில்லை. நாட்டில் பொருளாதார நெருக்கடி இருந்தது. எனவே, பொருளாதாரத்தை உறுதித்தன்மைக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை வழங்கிச் செயல்பட்டோம். ஊழல், மோசடியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
உரிய நேர எல்லையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயல்படுகின்றது. உள்ளாட்சிசபைத் தேர்தலின் பிறகு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட வேலைத்திட்டம் உள்ளது. அதற்கமைய புதிய அரசியலமைப்பு தொடர்பான பணியும் இடம்பெறும். அரசாங்கத்துக்குரிய செல்வாக்கு சரியாது, அது காலம் செல்லச்செல்ல அதிகரிக்கும். அரசாங்கத்தின் செல்வாக்கு குறையும் என எதிரணிகள் கனவு காண்கின்றன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியதில்லை. நிறுத்திய இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நாம் ஒருபோதும் காலத்தை இழுத்தடிக்கப்போவதில்லை. நாய்தான் வாலை ஆட்ட வேண்டும், நாயை வால் ஆட்டுவிக்க முடியாது. எனவே, அரசாங்கம் தமக்குரிய நிகழ்ச்சி நிரலை உரிய வகையில் முன்னெடுக்கும்’ – என்றார்.