இலங்கை
உயர்நீதிமன்ற வழக்காலேயே பட்டதாரிகள் நியமனம் தாமதம்;
உயர்நீதிமன்ற வழக்காலேயே பட்டதாரிகள் நியமனம் தாமதம்;
ஹரிணி அமரசூரிய விளக்கம்
உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கால் பட்டாரிகளுக்கு நியமனம் வழங்குவது தடைப்பட்டுள்ளது. அடுத்த வழக்குத் தவணையில் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி கிடைத்தால் அது தொடர்பில் உடனடியாகச் செயற்படுவோம் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- வேலையற்ற பட்டதாரிகளுக்கு எமது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய தொழிலில் இணைக்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதற்கென ஒழுங்கு விதிகள் உள்ளன. கடந்த அரசாங்கங்கள் போன்று எந்த வித முறைமையும் இல்லாமல் உயர்ந்தவரா குட்டையானவரா என பார்த்து நாங்கள் தொழில் வழங்குவதில்லை.
தொழில் வெற்றிடம் காணப்படும் துறைகளுக்கு ஆள்களை இணைத்துக்கொள்வதற்கு போட்டிப்பரீட்சை. நேர்முகப்பரீட்சை நடத்தியே இணைத்துக்கொள்கி றோம். பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ளத் தடையாக இருப்பது. உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்காகும். இது எதிர்க்கட்சியினருக்கும் தெரியும்.
பெரியளவில் ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் வழக்கு விசாரணையின் தீர்ப்பின் அடிப்படையிலே எம்மால் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள முடியும். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தை நாங்கள் சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம். அடுத்த வழக்கு விசாரணை ஏப்ரல் ஆரம்பத்தில் இடம்பெறவிருக்கிறது. இதன்போது எமது நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்குத் தெரிவிப்போம். எங்களுக்கு அனுமதி கிடைத்தால் உடனடியாக அது தொடர்பில் செயற்படுவோம். அதையும் நாங்கள் சரியான முறைமையின் பிரகாரமே மேற்கொள்வோம்- என்றார்.