இந்தியா
“புதுச்சேரி மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை முறையாக வழங்க வேண்டும்”: எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
“புதுச்சேரி மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை முறையாக வழங்க வேண்டும்”: எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சிவா உரையாற்றினார். அப்போது, “2021–ஆம் ஆண்டு தேசிய மருத்துவக் கவுன்சில், நான்கு ஆண்டுகள் மருத்துவக் கல்வி முடித்து, ஐந்தாம் ஆண்டு பயிற்சி மருத்துவம் பணிபுரியும் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அறிவித்தது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை ஏற்ற புதுச்சேரி அரசு, பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ .20 ஆயிரம் உதவித் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே பின்பற்றி வருகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் வழங்க மறுத்து, குறைந்த அளவில் ஊக்கத் தொகை வழங்குகின்றன. அதேபோன்று நிகர்நிலைப் பல்கலைக்கழங்கங்கள், மருத்துவ பயிற்சி பணி செய்யும் மாணவர்களுக்கு வெறும் ரூ. 2 ஆயிரத்து 500 மட்டும் வழங்கி ஏமாற்றுகின்றனர். இதுகுறித்து பயிற்சி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினர் அரசிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், புதுச்சேரியில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசு அறிவித்த ரூ. 20 ஆயிரம் உதவித் தொகையை தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும், மாஹே பிராந்தியத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஆயர்வேதா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரமாக இருந்த ஊக்கத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அதையும் நடப்பாண்டு முதல் வழங்க வேண்டும் என்று இந்த அவையின் வாயிலாக புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறேன்.கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையில் ஏற்படுத்தப்பட்ட பைலேரியா பிரிவு இருக்கிதா என்றே தெரியவில்லை. இத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கிறது. மறுபுறம் கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வி.சி.ஆர்.சி எனப்படும் வெக்டார் கன்ட்ரோல் ரிசர்ச் சென்டர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் கொசுக்களின் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து அதனை கட்டுப்படுத்த உரிய மருந்தை பரிந்துரைக்கின்றனர். அதை புதுச்சேரி பைலேரியா பிரிவு கடைபிடிக்கிறதா என்று தெரியவில்லை. உரிய மருந்து இல்லை என்பதும் பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. ஆகவே, புதுச்சேரியில் கொசு அதிகரித்தற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.