நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 27/03/2025 | Edited on 27/03/2025
விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று(27.03.2025) முதல் வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று(26.03.2025) இப்படத்திற்கு எதிராக படத்தில் முதலீடு செய்துள்ள பி4யூ(B4U) என்ற தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் பி4யூ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் டிஜிட்டல் உரிமையை விற்பதற்கு முன்னதாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்ததால், ஓ.டி.டி.க்கு விற்க முடியவில்லை என கூறி முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என பி4யூ நிறுவனம் கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் படக்குழு பி4யூ நிறுவனத்துக்கு ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு படம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இடைக்காலத் தடை குறித்து எதுவும் கூறவில்லை. அதுவரையில் படம் திரையிடப்படாது எனக் கூறப்படுகிறது. இடைக்காலத் தடை குறித்து இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் படத்தை ஆவலுடன் பார்க்க திரையரங்க வளாகத்தில் இருக்கும் ரசிகர்கள் படம் இன்னும் வெளியாகாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.