இலங்கை
பிரதமர் மோடியின் பயணத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தங்கள்!
பிரதமர் மோடியின் பயணத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தங்கள்!
அரசாங்கம் அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணத்தின்போது டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கை வருகின்றார். 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 5ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளது. அதன்பின்னர், ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இரு தரப்பு சந்திப்பு நடைபெறும். இரு தரப்பு சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதியும், இந்தியப் பிரதமரும் ஊடக சந்திப்பை நடத்துவார்கள். சம்பூர் சூரிய சக்தித் திட்டம் கொழும்பில் இருந்து திறந்துவைக்கப்படும்.
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி அநுராதபுரத்தில் ஸ்ரீமகாபோதியில் பிரதமர் மோடி வழிபாட்டில் ஈடுபடுவார். தண்டவாளத் திறப்பு விழாவும் நடைபெறும். வலு சக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன’ – என்றார்.
இந்தப் பயணத்தின்போது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், மாகாணசபைத் தேர்தல், அத்துமீறிய மீன்பிடி, கடல்சார் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி ஆகிய துறைகளில் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.