இலங்கை
யாழ். மாவட்டச் செயலகத்தில் குடிவரவு, குடியகல்வுச் சேவை
யாழ். மாவட்டச் செயலகத்தில் குடிவரவு, குடியகல்வுச் சேவை
விரைவில் ஆரம்பமாகும்: அமைச்சர் அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகத்தை யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இந்த மாதத்துக்குள் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில், தற்போது வவுனியா மாவட்டத்தில் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயம்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்துக்கே பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளது.
வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரிதசேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த மாதத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – என்றார்.