இலங்கை
சட்டவிரோத கடற்றொழிலால் 56,000 மீனவக் குடும்பங்கள் வடக்கில் பெரும் பாதிப்பில்!
சட்டவிரோத கடற்றொழிலால் 56,000 மீனவக் குடும்பங்கள் வடக்கில் பெரும் பாதிப்பில்!
இலங்கையின் வடமாகாண கடற்பரப்பில் அதிகரித்துவரும் சட்டவிரோத கடற்றொழில்கள் காரணமாகவும், அத்துமீறிய மீன்பிடி காரணமாகவும் 45 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளாலும், அதிகரித்துள்ள தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளாலும் மீனவக் குடும்பங்கள் கணிசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. 46 ஆயிரம் மீனவக் குடும்பங்களும், 10 ஆயிரம் மீனவப் பெண்தலைமைக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, வடபகுதி மீனவக் குடும்பங்களின் நலன்கருதி, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கடற்றொழில் அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன், தற்போதைய மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் இலஞ்சம் பெற்று தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறானநிலை மாறவேண்டும். எமது மீனவர்கள்படும் துயரங்கள் எண்ணிலடங்காதவை.
இந்தக் கோரிக்கைகளை நாம் மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றோம். இந்த விடயத்தில் தீர்வொன்று வழங்கப்படாத பட்சத்தில், போராட்டங்களை நடத்தவும் நாம் தயாராகவுள்ளோம் – என்றார்.