பொழுதுபோக்கு
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குப் பதிவு
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குப் பதிவு
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வொர்லியில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Actor Salman Khan receives fresh death threat, Mumbai police register case காவல்துறையின் கூற்றுப்படி, சல்மான் கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பியுள்ளார். இது மட்டுமின்றி, சல்மான் கானின் காரில் வெடிகுண்டு வைத்து அதனை வெடிக்கச் செய்யப் போவதாகவும் அந்நபர் மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சல்மான் கானை நிச்சயம் கொன்று விடுவதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் உதவி எண்ணிற்கு இவ்வாறு மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் முயற்சியில் வொர்லி போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.கடந்த 1998-ஆம் ஆண்டில் மானை வேட்டையாடிய வழக்கில் இருந்து, கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் ஹிட் லிஸ்டில் இருக்கும் சல்மான் கானுக்கு, சமீப மாதங்களில் அதிகமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, லாரன்ஸின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தாக்குதலுக்கு பொறுப்பேற்றார். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த பலரை கைது செய்த மும்பை போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.கடந்த ஆண்டு நவம்பரில், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் எனக் கூறி மும்பை போக்குவரத்து போலீசார் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்ணை தொடர்பு கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் கைது செய்யப்பட்டார். அப்போது, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமானால் கோயிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும் என்று அந்நபர் மிரட்டல் விடுத்தார்.